என் மலர்
செய்திகள்

கொலை செய்யப்பட்ட வாலிபர் பிரகாஷ்
நெய்வேலியில் வாலிபர் அடித்துக்கொலை
நெய்வேலியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் சரகம் கொள்ளிருப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் பிரகாஷ். (வயது 24). திருமணமாகாத இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு நீண்ட நேரமாகியும் பிரகாஷ் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பிரகாசை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இன்று காலை பிரகாஷ் நெய்வேலி அனல் மின் நிலையம் புதுசாம்பல் ஏரி திரவுபதி அம்மன் கோவில் அருகே பிணமாக கிடந்தார். இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து முனியனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த முனியன், அவரது மனைவி நீலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு அங்கு விரைந்தனர். பிரகாஷ் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.
தகவல் அறிந்த தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் விரைந்தனர். அப்போது அங்கு பிரகாஷ் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவரை யாரோ அடித்து கொன்று கோவில் பகுதியில் வீசி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிரகாசை அடித்து கொன்றவர்கள் யார்? எதற்காக அடித்து கொன்றனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்த பிரகாசின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் தெர்மல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். கொலையாளிகளை கைதுசெய்ய கோரி கோஷமிட்டனர். போராட்டம் செய்த உறவினர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த கொலை தொடர்பாக 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






