என் மலர்
செய்திகள்

சத்தியமங்கலம் அருகே கூண்டு வைத்து பிடித்த சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்தது
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யணூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். இவருக்கு அப்பகுதியில் தோட்டம் உள்ளது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இவரது தோட்டத்தில் வனப்பகுதியிலிருந்து புகுந்த ஒரு சிறுத்தை தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த இரண்டு ஆடுகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து அடித்து கொன்றது.
இதனால் அந்த ஊர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். “சிறுத்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்” என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வன அதிகாரிகள் அவரது தோட்டத்தில் கூண்டு வைத்தனர் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை அந்த கூண்டில் சிக்கியது. பிறகு அந்த சிறுத்தைக்கு கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி போட்டு கூண்டுடன் வனத்துறை வண்டியில் ஏற்றினர்.
பின்பு அந்த சிறுத்தை தெங்குமர கடா செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்று படுகையில் திறந்து விடப்பட்டது. கூண்டிலிருந்து வெளியே பாய்ந்து சிறுத்தை காட்டுக்குள் புகுந்து ஓடியது.
சிறுத்தை பிடிப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த குய்யனூர் பகுதி மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆடுகளை அடித்து கொன்று தின்று ருசி கண்ட அதே சிறுத்தை மீண்டும் அதே கிராமமான குய்யனூர் அருணாச்சலம் தோட்டத்திற்குள் இன்று அதிகாலை புகுந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளில் ஒரு ஆட்டை அடித்து கொன்றது. அதன் பாதி உடலை தின்று மீதி உடலை போட்டுவிட்டு சென்று விட்டது.
இன்று காலை மீண்டும் சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கொன்றதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விவசாயி அருணாச்சலம் நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தச் சம்பவம் அறிந்த அந்த கிராம மக்கள் திரண்டனர் ஏற்கனவே பார்த்த அதே சிறுத்தை தான் மீண்டும் வந்துவிட்டது என்று விவசாயி அருணாசலமும் பொதுமக்களும் கூறினர். இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடித்து திரும்பி வரமுடியாத அளவு மலை மேலே உள்ள காட்டில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இதனை வலியுறுத்தி கிராம மக்கள் சிறுத்தையால் கொல்லப்பட்ட ஆட்டின் உடலுடன் சத்தியமங்கலம் - மைசூர் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும் போலீசாரும் சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.






