என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை சம்பவம் நடந்த வீடு.
    X
    கொள்ளை சம்பவம் நடந்த வீடு.

    ஈரோட்டில் புத்தக கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து 50 பவுன் நகை கொள்ளை

    ஈரோட்டில் புத்தக கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 50 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு காரைவாய்க்கால் மொய்தீன் வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு மீனா, ரம்யா, ரேகா, ஜனனி என 4 மகள்கள் உள்ளனர்.

    முருகேசன் ஈரோடு நேதாஜி ரோட்டில் சொந்தமாக புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார். முருகேசனின் வீடு இரண்டு மாடிகள் கொண்டதாகும். தினமும் இரவில் முருகேசன் தனது குடும்பத்தாருடன் முதல் மாடியில் தூங்குவது வழக்கம்.

    அதைப் போன்று நேற்று இரவும் முருகேசன் வீட்டின் கதவை உள் பக்கமாக தாழ்போட்டு சாவியை அருகில் சுவற்றில் பொருத்தப்பட்டு இருந்த பாக்ஸில் போட்டு விட்டு முதல் மாடியில் தூங்க சென்று விட்டார்.

    இந்நிலையில் நள்ளிரவில் இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் முருகேசன் வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு குச்சியை நீட்டி சுவற்றில் மாட்டியிருந்த சாவியை லாவகமாக வெளியே எடுத்தனர்.

    பின்னர் கதவை திறந்து வீட்டிற்குள் வந்த மர்ம ஆசாமிகள் பீரோ சாவியை திறந்து பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ 40 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் அள்ளிச் சென்றனர்.

    இன்று காலை தூங்கி எழுந்ததும் கீழே வந்த முருகேசன் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டும் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொள்ளையில் ஈடுபட்டது முருகேசனுக்கு தெரிந்த நபராக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×