search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி நொறுக்கப்பட்டு கிடக்கும் காட்சி.
    X
    விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி நொறுக்கப்பட்டு கிடக்கும் காட்சி.

    வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்கு திரும்பிய நிறைமாத கர்ப்பிணி விபத்தில் பலி

    வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்கு திரும்பிய கர்ப்பிணி விபத்தில் பலியானார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
    பல்லடம்:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (30). கோவை பீளமேட்டில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் உடுமலை பூலாங்கிணறை சேர்ந்த பி.காம். பட்டதாரியான தமிழ்செல்விக்கும் (22) கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    தமிழ்செல்வி தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையொட்டி அவருக்கு நேற்று திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    வளைகாப்பு முடிந்ததும் லோகேஸ்வரன், அவரது மனைவி தமிழ்செல்வி, அவரது பெற்றோர் சேகர், ஜோதிமணி ஆகியோர் காரில் பூலாங்கிணறுக்கு புறப்பட்டனர்.

    காரை லோகேஸ்வரன் ஓட்டி சென்றார். பல்லடம் அருகே உள்ள அரசங்காடு என்ற பகுதியில் சென்ற போது எதிரே ஒரு கார் வந்தது. திடீரென இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் காரை ஓட்டி சென்ற லோகேஸ்வரன் அவரது மனைவி தமிழ் செல்வி, காரில் இருந்த சேகர், ஜோதிமணி ஆகியோரும் மற்றொரு காரில் வந்த மணிகண்டன், தண்டபாணி, சாந்தாமணி, மனோன்மணி ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    அவர்கள் 8 பேரையும் பல்லடம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே நிறைமாத கர்ப்பிணி தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

    படுகாயம் அடைந்த மற்ற 7 பேரும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் தனது மனைவி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை பலியான தகவல் கிடைத்து லோகேஸ்வரன் கதறி துடித்தார். அவரது உறவினர்களும், தமிழ்செல்வி உறவினர்களும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுத வண்ணம் இருந்தனர். இதனால் அப்பகுதியே சோகத்துடன் காணப்பட்டது.
    Next Story
    ×