search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பூங்கொடி
    X
    கைதான பூங்கொடி

    நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி

    திருச்செங்கோடு நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 66), தறி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    கல்யாணசுந்தரம் தன்னுடன் வேலை பார்த்த பூங்கொடி (46) என்பவரை 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மேலும் கல்யாணசுந்தரத்திற்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    பூங்கொடியின் நடத்தையிலும் கல்யாண சுந்தரத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் பூங்கொடியை வேலைக்கு வரவேண்டாம் என்றும் சண்முகசுந்தரம் கூறி வந்தார்.

    நேற்று அதிகாலை 4 மணியளவில் தறிப்பட்டறை வேலைக்கு செல்வதற்காக கல்யாணசுந்தரம் புறப்பட்டார். அப்போது நானும் உங்களுடன் வருகிறேன் என பூங்கொடி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கல்யாணசுந்தரம் என்னுடன் வந்தால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மனைவியை மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பூங்கொடி கல்யாணசுந்தரத்தை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் ஆவேசமான அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி கல்யாணசுந்தரத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன் பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்களிடம் எதுவுமே அறியாதது போல் பூங்கொடி நாடகமாடினார். பின்னர் சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பூங்கொடி போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் கூறினார். அதன் விவரம் வருமாறு:-

    வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கல்யாணசுந்தரம், எனது நடத்தையிலும் சந்தேகம் அடைந்து சித்ரவதை செய்தார். இதனால் நான் மனவேதனையில் தவித்தேன். நேற்று அதிகாலையும் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் கல்யாணசுந்தரத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணையில் உண்மையை கண்டு பிடித்து என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பூங்கொடியை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×