search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி பேசிய காட்சி.
    X
    ஒட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி பேசிய காட்சி.

    தமிழகத்திற்கு ஸ்டாலினால் தான் நல்லாட்சி வழங்க முடியும்- புதுவை முதல் மந்திரி நாராயணசாமி பேச்சு

    தமிழகத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் தான் நல்லாட்சி வழங்கமுடியும் என்று ஒட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி பேசினார்.
    ஒட்டப்பிடாரம்:

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஒட்டப்பிடாரம் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுச்சேரியில் மொத்த மக்கள் தொகை 14 லட்சம் தான். இதில் ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என சொன்ன மோடி அரசு எதனையும் செய்யவில்லை. மோடி ஆட்சியில் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பணக்காரர்களுக்கு தான் மோடி ஆட்சியில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நூலுக்கான வரி முழுவதும் ரத்து செய்யப்படும்.

    மோடியின் அடிமை ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. மோடியின் மக்கள் விரோத ஆட்சி 23-ந் தேதிக்கு பின்னர் முடிவுக்கு வரும். மோடியின் தம்பிகளான ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். ஆட்சியும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மூன்றாண்டு காலம் மத்தியில் மோடி அரசையும், மாநிலத்தில் கிரண்பேடியையும் சமாளித்து ஆட்சியை நடத்திவருகிறேன். புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டத்தை நான் எதிர்த்து போராட்டம் நடத்தினேன். அங்கு அனுமதிக்க மாட்டோம். ஏன் தமிழகத்தில் முதல்வர் எதிர்க்கவில்லை.

    தமிழகத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் தான் நல்லாட்சி வழங்கமுடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. ஒரே வரியாக்கப்படும். புதியமுத்தூர் பகுதி குட்டி ஜப்பானாக தொழில் வளத்தில் சிறப்பாக இருந்தது. இப்போது அந்த பகுதியில் வேலை வாய்ப்பில்லாத நிலை உருவாகியுள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் வேலை வாய்ப்பு போய்விட்டது.

    வருடத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என மோடி அறிவித்து இருந்தார். அப்படி பார்த்தால் 5 ஆண்டுகளில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×