என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலினின் அரசியல் சதுரங்கத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் - வைகோ
    X

    மு.க.ஸ்டாலினின் அரசியல் சதுரங்கத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் - வைகோ

    மு.க.ஸ்டாலினின் அரசியல் சதுரங்கத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெஞ்சமாங் கூடலூர், ஈசநத்தம், சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்ற படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி காவிரிக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தளபதி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் உதயசூரியன் நகரில், வறுமையில் வாடுவோர், ஒரு குடிசைக்குள் 3 குடும்பங்களாக நெருக்கடியில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரை கணக்கெடுத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 செண்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்கிற அவரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. அதனை மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருப்பதால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுவது உறுதி.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தற்போதுகூட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் திணிக்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு எதிரான மோடி ஆட்சி மத்தியில் தூக்கி எறியப்படும். முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட மோடி ஆட்சி பச்சை கொடிகாட்டி விட்டார்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி தஞ்சை தரணி உள்பட காவிரி டெல்டாவை பஞ்ச பகுதிகளாக மாற்ற துடிக்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நகர்த்துகின்ற அரசியல் சதுரங்ககாய்களை பொறுத்து, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை தட்டிக்கேட்க முடியாமல் திராணியில்லாமல் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

     


    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளை விற்பனை செய்வது பற்றிய செய்திகள் வருகிறது. இதை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது.

    ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என குழந்தைகளை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் விற்கின்ற கொடுமை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரங்கேறி இருக்கிறது. அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? அவர்களை பிச்சை எடுக்கக்கூட பயன்படுத்தலாம். இதையெல்லாம் பார்க்கும் போது சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு விட்டதை பார்க்க முடிகிறது.

    மருத்துவம் படிக்க விரும்பும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வு எழுதபோகிற இடத்தில், மாணவிகள் காதிலே போட்டிக்கிற கம்மலை கழற்ற சொல்கிறார்கள். அதில் என்ன கம்யூட்டரா வைத்திருக்க முடியும். இதைவிட அந்த பெண் வெட்கி தலை குனியும்படி துப்பட்டாவை எடுத்து சோதனை போட்டிருக்கிறார்கள்.

    தேர்வு எழுதப் போகும் போது எத்தனை பதற்றம் இருக்கும். நானும் கல்லூரிகளிலே தேர்வு எழுதியவன் தான். ஆனால் நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்னரே, இப்படி சோதனை போட்டால் அவர்கள் எப்படி பதற்றமின்றி தேர்வெழுத முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத போகிறவர்களுக்கு சோதனை செய்கிறார்களா? என்றால் இல்லை.

    அரியலூர் மாணவி அனிதா மற்றும் பிரதீபா ஆகியோர் நீட் தேர்வினால் தங்களுக்கு இன்னுயிரை மாய்த்து கொண்டதை மறக்க இயலுமா? 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்-அமைச்சராவார். அது பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிற மாநில சுயாட்சியாக தான் இருக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் உறுதி எனும்போது நீட் உள்ளிட்டவற்றில் பறிபோன தமிழக உரிமைகள் மீட்கப்படுவது உறுதி.

    நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கேபிள் டி.வி. கட்டணம், கியாஸ் சிலிண்டர் உயர்வு ஆகியவற்றால் மக்கள் படும் அவதி தீர்க்கப்படும்.

    Next Story
    ×