search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களுக்கு அனுமதி- போக்குவரத்து கழகத்துக்கு கடிதம்
    X

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களுக்கு அனுமதி- போக்குவரத்து கழகத்துக்கு கடிதம்

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ்களை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்து கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதி உள்ளது. #Koyambedubusstand
    சென்னை:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாநகர பஸ்களும், வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (சி.எம்.டி.ஏ.) நிர்வகித்து வருகிறது.

    தனியார் ஆம்னி பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள இடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அலுவலகங்களும் அங்கு செயல்பட்டு வருகின்றன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய அடுக்குமாடி நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சில பஸ்கள் கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகின்றன.

    இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் நெருக்கடி குறைந்துள்ளது.

    இதற்கிடையே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ்களை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்து கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் ஜவகர்லால் நேரு சாலை- காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் 360 பஸ்கள் மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. ஆனால் 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு நெரிசலை குறைக்க தனியார் பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறும் போது, கோயம்பேட்டில் இருந்து நீண்ட நேரம் செல்லும் பஸ்கள் மாதவரம் மற்றும் கே.கே.நகர் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 இடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் தனியார் பஸ்களுக்கு கோயம்பேட்டில் இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. காலி இடங்கள் ஏலம் விடப்படுகிறதா அல்லது ஆம்னி பஸ்கள் இயக்க கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதா என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார். #Koyambedubusstand
    Next Story
    ×