search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வரை விமர்சித்து பேசியதாக வழக்கு- முக ஸ்டாலின் மார்ச் 8ந்தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
    X

    முதல்வரை விமர்சித்து பேசியதாக வழக்கு- முக ஸ்டாலின் மார்ச் 8ந்தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி இன்று உத்தரவிட்டார். #MKStalin
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடைந்தது. இதையடுத்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் கடந்த 3.9.2018 அன்று முக்கொம்பு கொள்ளிடம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் அலட்சியத்தால்தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது. எனவே அணை உடைப்புக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

    அணைகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அரசு அலட்சியம் காட்டுகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. அரசு வக்கீல் சம்பத்குமார், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் முதல்வரை அவதூறாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, திருச்சி கோர்ட்டில் இன்று மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று வழக்கில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் ஓம்பிரகாஷ், மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதன் காரணமாக ஆஜராக முடியவில்லை என்றும், வழக்கு விசாரணையை சென்னை கோர்ட்டில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதற்கு அரசு வக்கீல் சம்பத்குமார் ஆட்சேபனை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, வருகிற 8.3.2019 அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும், திருச்சி கோர்ட்டில் ஆஜரான பிறகு சென்னை கோர்ட்டுக்கு வழக்கு விசாரணையை மாற்றுவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.

    முதல்வரை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. #MKStalin
    Next Story
    ×