என் மலர்
செய்திகள்

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி
அம்மாப்பேட்டை:
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள உடையார் கோவில் கிராமம் காடவராயர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித் தொழிலாளி. இவருடைய குழந்தைகள் தாரிகா (வயது 4), சித்தார்த் (2).
இந்த நிலையில் நேற்று தாரிகாவும், சித்தார்த்தும் வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் திடீரென குளத்தில் இறங்கினர். இதையாரும் கவனிக்கவில்லை. இதனால் குளத்தில் இறங்கிய தாரிகாவும், சித்தார்த்தும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் விளையாட சென்ற மகனும், மகளும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் குளத்துக்கு சென்று பார்த்தனர். கரையில் இருவரையும் காணாததால் சந்தேகத்தின் பேரில் குளத்திற்குள் இறங்கி தேடிப்பார்த்தனர்.
அப்போது குளத்திற்குள் மூழ்கி உயிரிழந்த தாரிகா மற்றும் சித்தார்த் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து சதீஷ்குமாரின் மனைவி கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






