search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரமுத்து-பொன்னம்மாள்
    X
    வைரமுத்து-பொன்னம்மாள்

    ராதாபுரம் அருகே திமுக பிரமுகரின் மனைவி- மாமியார் வி‌ஷம் குடித்து தற்கொலை

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தி.மு.க. பிரமுகரின் மனைவி மற்றும் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சியை சேர்ந்தவர் மாயராமன். தி.மு.க. ஊராட்சி கழக செயலாளராக உள்ளார். இவரது மனைவி வைரமுத்து (வயது32). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

    வைரமுத்து அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். இதனால் தங்களுக்கு குழந்தை இல்லாததை காரணம் காட்டி மாயராமன் வைரமுத்துவின் பெற்றோர் பெயரில் உள்ள பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாயராமன் தனது மனைவியிடம் உனக்கு குழந்தை இல்லாததால் வேறு திருமணம் செய்யப்போகிறேன் என கூறி மிரட்டினாராம்.

    சொத்துக்களையும் எழுதிவாங்கிவிட்டு வேறு திருமணம் செய்யப்போவதாக மிரட்டியதால் வைரமுத்து மனவேதனை அடைந்தார். இதுபற்றி அவர் தனது தாய் பொன்னம்மாளிடம் கூறினார். இந்த நிலையில் கடந்தவாரம் மாயராமன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்ததாக தெரிகிறது.

    மேலும் இந்த விவரத்தை மாமியார் பொன்னம்மாள் மற்றும் மனைவி வைரமுத்துவுக்கு வக்கீல்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது வைரமுத்து மற்றும் பொன்னம்மாளுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாயராமன் 2-வது திருமணம் செய்தது குறித்து ராதாபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    ஆனால் புகாரை போலீசார் வாங்க மறுத்ததோடு, குழந்தை இல்லை என்றால் அவர் வேறு திருமணம் செய்வதில் தவறு இல்லை எனக்கூறி உதாசீனமாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து வைரமுத்துவும், அவரது தாய் பொன்னம்மாளும் நெல்லையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இது அவர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். அதன்படி வைரமுத்துவும், பொன்னம்மாளும் நேற்று இரவு தங்களது வீட்டில் வைத்து வி‌ஷத்தை தின்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அறையில் படுத்துக்கொண்டனர்.

    இதனிடையே இன்று காலை அவர்களது வீடு வெகுநேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு தாய்-மகள் இருவரும் இறந்து கிடந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ராதாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்களது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தங்கள் சாவுக்கு மாயராமன் உள்ளிட்ட சிலர் காரணம் என சிலரது பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தனர். அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வைரமுத்து மற்றும் அவரது தாய் ஆகிய இருவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்யவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்கும் வரை இருவரது உடல்களையும் வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை மாயராமனுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும், போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்தனர். தாய்-மகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×