search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவட்டார் அருகே திருமணத்துக்கு மறுத்த விதவை மீது ஆசிட் வீச்சு- வி‌ஷம் குடித்து கள்ளக்காதலன் தற்கொலை
    X

    திருவட்டார் அருகே திருமணத்துக்கு மறுத்த விதவை மீது ஆசிட் வீச்சு- வி‌ஷம் குடித்து கள்ளக்காதலன் தற்கொலை

    திருவட்டார் அருகே திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு வியன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவரது மனைவி கிரிஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஜான்ரோஸ் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். இங்கு அவர் திடீரென மரணம் அடைந்தார்.

    அதன் பிறகும் கிரிஜாவுக்கும், ஜான் ரோசுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு நீடித்தது. கணவர் இறந்து விட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிஜாவை ஜான்ரோஸ் வற்புறுத்தினார். ஆனால் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர்கள் நலனுக்காக தான் 2-வது திருமணம் செய்ய விரும்பவில்லை என கிரிஜா தெரிவித்தார்.

    ஆனால் ஜான்ரோஸ் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தி கிரிஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஜான்ரோஸ், கிரிஜாவை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பாக கிரிஜா திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஜான்ரோஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த பிரச்சினைக்கு பிறகு சில காலம் கிரிஜாவை ஜான்ரோஸ் சந்திக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களாக மீண்டும் கிரிஜாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். கிரிஜா மீண்டும் மறுப்பு தெரிவிக்கவே அவர் மீது ஜான்ரோஸ் ஆத்திரம் கொண்டார்.

    நேற்று இரவு கிரிஜா தனது குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த ஜான்ரோஸ், ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை எடுத்து கிரிஜாவின் முகத்தில் வீசினார். இதில் கிரிஜாவின் முகம் கருகி வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இதையடுத்து ஜான்ரோஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    கிரிஜாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கிரிஜாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆசிட் வீசியதில் கிரிஜாவின் 2 கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய ஜான்ரோசை தேடினர். அப்போது அவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ரோஸ் இறந்தார். திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×