search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது எடுத்த படம்
    X
    குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது எடுத்த படம்

    பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #CuddaloreStudents #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே இட்லி கடை நடத்தி வந்தவர் தனலட்சுமி (வயது 40).

    கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி தனலட்சுமியின் இட்லி கடைக்கு அடிக்கடி சென்று இட்லி வாங்கி சென்றார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து தனலட்சுமி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பள்ளியிலும், உறவினர்களிடம் தெரிவித்து விடுவதாக கூறி மிரட்டினார்.

    மேலும் நெல்லிக்குப்பம் திருகண்டேஸ்வரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அனுப்பி வைத்தார். தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் அந்த மாணவி கதறி அழுதார். அப்போது வேறு ஒரு மாணவியை என்னிடம் அழைத்து வந்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்று தனலட்சுமி கூறினார்.

    அதை நம்பி அந்த மாணவி தன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மற்றொரு மாணவியை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த மாணவியை அறையில் அடைத்து வைத்து 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    மேலும் 2 மாணவிகளையும் திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரது வீட்டுக்கு தனலட்சுமி அனுப்பி வைத்தார். அவர் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் தனலட்சுமி 2 மாணவிகளையும் விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த விபசார கும்பலிடம் விற்றார்.

    அந்த கும்பலிடம் சிக்கிய 2 மாணவிகளும் தப்பி திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் 5.8.2014 அன்று தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினர்.

    இதையொட்டி மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 17 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

    அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 4.7.2016 அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தீபா துரித விசாரணை நடத்தி கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் கடந்த 4-ந் தேதி நடந்தது. மாணவிகளை பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

    1) கலா (48), விருத்தாசலம்.

    2) தனலட்சுமி, திட்டக்குடி.

    3) ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம், காட்டுக்கூனங்குறிச்சி.

    4) பாத்திமா (35), வளவனூர்.

    5) ராதா (35), நெல்லிக்குப்பம், சுல்தான்பேட்டை.

    6) ‌ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.

    7) கவிதா (34), வடலூர்.

    8) அன்பழகன் (28), சேலம், அயோத்தியாபட்டினம்.

    9) அமுதா (28), சேலம்.

    10) மோகன் (28), திட்டக்குடி.

    11) மதிவாணன் (23), திட்டக்குடி.

    12) அன்பு, விருத்தாசலம்.

    13) ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம்.

    14) பாலசுப்பிரமணியன் (42), புதுப்பேட்டை, விருத்தாசலம்.

    15) ராதிகா (30), பண்ருட்டி.

    16) மதபோதகர் அருள்தாஸ், திட்டக்குடி.

    பண்ருட்டியை சேர்ந்த மகாலட்சுமி மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் இன்று (திங்கட்கிழமை) தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வ பிரியா ஆஜராகி வாதாடினார்.

    அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு குற்றவாளிகள் அனைவரும் கடலூர் சிறையில் இருந்து மகளிர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.



    பின்னர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நீதிபதி லிங்கேஸ்வரன் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரத்தை நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.

    மதபோதகர் அருள்தாசுக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்த நீதிபதி லிங்கேஸ்வரன் மேலும் தண்டனை விபரங்களை தொடர்ந்து வாசித்து வருகிறார். #CuddaloreStudents #CuddaloreCourt

    Next Story
    ×