search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    கள்ளக்குறிச்சி அருகே பெண்களை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பெண்களை கட்டிப்போட்டு மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி (வயது 45). இவருக்கு சத்யராஜ் என்ற மகனும், தனலட்சுமி (25) என்ற மகளும் உள்ளனர்.

    சத்யராஜிக்கு திருமணமாகி விட்டது. அவரது மனைவி சுகுணா (26) இவர்கள் அனைவரும் காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் ஏழுமலை (45) என்பவரும் விவசாய வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணியளவில் அவர்கள் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது 5 வாலிபர்கள் அங்கு திடீரென்று வந்தனர். அவர்களில் 2 பேர் வீட்டுக்கு வெளியே நின்றனர். 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.

    உடனே அவர்கள் அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

    பின்பு அவர்கள் சத்யராஜ், சுகுணா, தனலட்சுமி, கண்ணகி, ஏழுமலை ஆகியோரை கை-கால்களை கட்டினர். பின்பு அவர்கள் சுகுணா, தனலட்சுமி கழுத்தில் கிடந்த செயின் மற்றும் கம்மலை பறித்தனர். அப்போது ஏழுமலையும் கண்ணகியும் கூச்சல் போட்டு அலறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஏழுமலையையும், கண்ணகியையும் கட்டையால் தலையில் தாக்கினர். இதில் அவர்கள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அப்போது சுகுணா மறைத்து வைத்து இருந்த செல்போனில் உறவினர்களுக்கு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். இதை அறிந்ததும் உறவினர்கள் பாண்டியன், கண்ணன் ஆகியோர் காட்டுக்கொட்டாய்க்கு விரைந்து வந்தனர்.

    இதை பார்த்ததும் வீட்டிற்கு வெளியே நின்ற 2 கொள்ளையர்களும் உஷார் அடைந்து பாண்டியன், கண்ணன் ஆகியோரையும் தாக்கி கயிற்றால் கட்டினர். மேலும் அவர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர்.

    பின்பு கொள்ளையர்கள் அனைவரும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ரூ.70 ஆயிரத்தையும், 3 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×