search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூரில் தீ விபத்து: 4 குடிசைகள் எரிந்து நாசம்
    X

    எண்ணூரில் தீ விபத்து: 4 குடிசைகள் எரிந்து நாசம்

    சென்னை எண்ணூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து நாசம் அடைந்தன.
    திருவொற்றியூர்:

    சென்னை எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 50). மீனவர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென அந்த குடிசை தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

    இதனால் திடுக்கிட்டு எழுந்த ரத்தினவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர், திருவொற்றியூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 குடிசைகள் மற்றும் அங்கு இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கந்தன் என்பவரது ஒரு மோட்டார்சைக்கிள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர் மற்றும் அக்கட்சியினர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், வருவாய்த்துறை சார்பில் 4 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகவும், இதனால் தங்களுக்கு கான்கிரீட் வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×