search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா தண்ணீர் ஒரு வாரத்தில் தமிழக எல்லைக்கு வரும் பூண்டி ஏரியில் தேக்கப்படும்
    X

    கிருஷ்ணா தண்ணீர் ஒரு வாரத்தில் தமிழக எல்லைக்கு வரும் பூண்டி ஏரியில் தேக்கப்படும்

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் தமிழக எல்லைக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரியில் தேக்கப்படும்.#Krishnawater

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கியமானதாக உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு தேவைப்படும் போது சென்னை குடிநீருக்கு திறந்து விடப்படுகிறது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் இருந்த தண்ணீர் பெருமளவு வறண்டு விட்டதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    ஜூலை மாத தவனையின் படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால்போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    இந்த நிலையில் ஆந்திராவில் கிருஷ்ணா நதி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியது.

    அங்கிருந்து சோமசிலா அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பியதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஸ்ரீசைலத்திலிருந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது 300 கனஅடி தண்ணீர்திறந்து விடப்படுகிறது. இதனை படிப்படியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 10 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கோடை வெயிலால் கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பாயும் வேகம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரம் வரைதான் தண்ணீர் பாய்ந்து வருகிறது.

    கண்டலேறு-பூண்டி இடையே தூரம் 177 கிலோ மீட்டர் ஆகும். இதன்படி பார்த்தால் கிருஷ்ணா நதி நீர் இந்த வார முடிவில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. தமிழக எல்லையில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்ல கூடுதலாக மேலும் ஒருநாள் ஆகும்.

    கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தாலும் உடனடியாக சென்னைக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நீர் வந்ததும் நீர் மட்டம் குறைந்தது 30 அடியாக உயர்ந்த பின்னரே பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். #Krishnawater

    Next Story
    ×