search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    வங்கி மேலாளர் வீட்டில் நடந்த முகமூடி கொள்ளையில் வேலைக்கார பெண்ணிடம் விசாரணை

    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களது வீட்டின் கீழ் பகுதியில் வேலைக்கார பெண் ராணி என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி வீட்டில் இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் வேலைக்கார பெண் ராணி ஆகியோரை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களது வாயில் துணியை திணித்து விட்டு பீரோவில் இருந்த 206 பவுன் நகையை அள்ளி தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முகமூடி கும்பலை பிடிக்க துணை கமி‌ஷனர் முத்துசாமி தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளையர்களின் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    யோகசேரன் தனது மனைவியின் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். மதுரையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நகைகளை வங்கியில் இருந்து எடுத்து வந்திருந்தார்.

    நேற்று காலைதான் மதுரையில் இருந்து திரும்பி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்நேற்று மதியம் வீட்டுக்கு வந்த முகப்பேரில் வசிக்கும் அவர்களது மகள் செந்தமிழ் காவியா தனது 175 பவுன் நகைகளையும் வங்கி லாக்கரில் வைக்கும்படி பெற்றோரிடம் கொடுத்து சென்று உள்ளார். அந்த நகையுடன் சேர்த்து மொத்தம் 206 பவுன் நகையை கொள்ளையர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    இந்த கொள்ளையில் வேலைக்கார பெண் ராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முகமூடி கொள்ளை கும்பல் கதவை தட்டிய போது ராணிதான் கதவை திறந்து விட்டு உள்ளார். அவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிடாதது ஏன்? யோகசேரன் வீட்டில் நகை இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து ராணியை தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திட்டமிட்டு முகமூடி கும்பலை வரவழைத்து நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ராணியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். முகமூடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணியின் செல்போனை கைப்பற்றி கொள்ளை நடந்த நாளில் அவர் யார்? யாருடன் பேசினார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர். #PallavaramRobbery 
    Next Story
    ×