search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்- பக்தர்கள் பங்கேற்றனர்
    X

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்- பக்தர்கள் பங்கேற்றனர்

    ‘மரியே வாழ்க’ என்ற கோ‌ஷத்துடன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். #velankannimathachurch

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான ஆன்மிக சுற்றுலா தலமாகும். கீழை நாடுகளின் ‘‘லூர்து நகர்’’ என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.

    கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘‘பசிலிக்கா’’ என்ற அந்தஸ்து, வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உண்டு. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

    வேளாங்கண்ணி ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னை ஆரோக்கியமாதாவின் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    கொடி ஊர்வலம் தேவாலய வளாகம், கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள 90 அடி உயர கொடி கம்பத்தில் 6.40 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்தார்.

    கொடியேற்றத்தின்போது பேராலயத்தின் அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஒளிர விடப்பட்டன. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘‘மரியே வாழ்க’’ என சரண கோ‌ஷம் எழுப்பினர். கொடியேற்றத்தையொட்டி வாணவேடிக்கையும் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர்.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், பேராலய அதிபர் பிரபாகர், உதவி அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ஜூலியட் அற்புத ராஜ், கிங்ஸ்லி ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந்தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. #velankannimathachurch

    Next Story
    ×