search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அற்புதம்மாள்
    X
    அற்புதம்மாள்

    ராகுல்காந்தி கருத்து மூலம் பேரறிவாளன் குற்றமற்றவர் என நிரூபணமாகியுள்ளது - தாய் அற்புதம்மாள்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து மூலம் பேரறிவாளன் குற்றமற்றவர் என நிரூபணமாகியுள்ளது என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறி உள்ளார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan
    வேலூர்:

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, டைரக்டர் பா.ரஞ்சித் சந்தித்தார். அப்போது, பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டுமென ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.



    அதற்கு ராகுல்காந்தி, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்கு தனிப்பட்ட முறையில் நான் தடையாக இருக்க மாட்டேன். தன் தந்தை கொலை தொடர்பான சதித்திட்டங்கள் மற்றும் சட்ட சிக்கல்களுமே அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்கும் என கருதுவதாக ராகுல் காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் கருத்து தொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தியே பேரறிவாளன் விடுதலைக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இதன் மூலம் ராஜீவ்காந்தி கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்படவில்லை என்று வெளிப்பட்டுள்ளது.

    திசை மாறிபோன இந்த வழக்கை, சரியான திசை நோக்கி கொண்டு சென்றது பேரறிவாளன் தான். இந்த வழக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறது. அது தற்போது ராகுல்காந்தி கருத்து மூலம் வெளிப்பட்டிருக்கிறது.



    கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்டோரை ஜெயிலில் அடைத்திருப்பது, இந்தியாவிலேயே வேறு எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுபோன்று தண்டிக்கப்படவில்லை.

    தடா வழக்கில் இருந்தவர்களை கூட மாநில அரசு விடுதலை செய்துள்ளது. அப்போது எதிர்க்காத மத்திய அரசும், ஜனாதிபதியும் தற்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் என்ற ஒரே ஒரு பதவி தான் காரணம்.

    எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் தான். இன்னும் எத்தனை வருடம் இந்த காரணத்தை சொல்லி இந்த வழக்கை கொச்சைப்படுத்த போகிறார்கள். ராகுல் காந்திக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு விபரம் முழுமையாக தெரியும்.

    பேரறிவாளன் உள்பட அனைவரையும் பற்றி தெரிந்த பிறகே ராகுல்காந்தி விடுதலை சம்பந்தமான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இன்னும் காலம் தாழ்த்தினால் உலக நாடுகளில் இந்த வழக்கு கேவலப்பட்டு நிற்கும்.

    எல்லா அரசியல்வாதிகளும் ஆதாயத்திற்காகவே பேசுகின்றனர். இந்த 27 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது அது தான். டைரக்டர் பா.ரஞ்சித்தை பற்றி தவறாகவே சொல்ல மாட்டேன். எப்பவும் எங்கள் மீது பாசமாக இருப்பார். நாங்கள் உயிர் வலி ஆவண படம் தயார் செய்யும் போது எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து பணம் உதவி செய்தவர் பா.ரஞ்சித்.

    பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை செயல் வடிவமாக மாற்றுவதற்கு மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் என் பிள்ளையை விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan



    Next Story
    ×