search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ரூ.480 கோடி செலவில் இந்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், மூலனூர், குண்டடம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தாராபுரம் புதிய கல்வி மாவட்ட அலுவலகம் தாராபுரம் பைவ் கார்னர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டது. இந்த புதிய கல்வி மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கல்வெட்டை திறந்துவைத்தார்.

    இதைத்தொடர்ந்து உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2017-2018-ம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 216 பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,687 ஆசிரியர்கள், 21 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற 6 ஆசிரியர்கள், 100 சதவீதம் வருகை புரிந்த 3 ஆசிரியர்கள் என மொத்தம் 1,933 ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 500 பட்டய கணக்காளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் பயனடைவார்கள். பிளஸ்-2 வகுப்பு முடித்தவுடன் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

    தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் மாற்று சான்றிதழ் (டி.சி) கொடுத்து வெளியில் அனுப்பி விடுகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டியது உள்ளது. ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் வகையில் ‘பயோ மெட்ரிக்’ முறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ.480 கோடி செலவில் இந்த மாத இறுதிக்குள் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    தமிழகத்திற்கு மத்திய மனித வளத்துறை மந்திரி வந்த போது கல்வித்துறையில் தமிழ்நாட்டை பின்பற்றப்போகிறோம் என்று பாராட்டினார். புதிய பாடத்திட்டம் வரலாறு படைத்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அங்கன்வாடி மையத்தில் 4 வயது முடிந்த குழந்தைகளை நேரடியாக பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் பள்ளிகல்வியில் 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

    விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25 கோடி செலவில் 38 ஆயிரத்து 500 பேருக்கு கோழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். 
    Next Story
    ×