search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் தாழக்குடி பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.
    X
    மழையால் தாழக்குடி பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

    குமரியில் மழை நீடிப்பு - 750 பாசன குளங்கள் நிரம்பியது

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 750 பாசன குளங்கள் நிரம்பி விட்டன.
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    திற்பரப்பு, அடையாமடை, பூதப்பாண்டி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குளச்சல், குருந்தன்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்குகேற்ப தண்ணீரை திறந்து விடவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதால் சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    புத்தேரி, பொற்றையடி, பூதப்பாண்டி பகுதிகளில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட் டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் 750 குளங்கள் நிரம்பி விட்டன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இறச்சகுளம் பகுதியில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    பாசன குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கமாக மாவட்டம் முழுவதும் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டும் அதே அளவு பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6.10 அடியாக உள்ளது. அணைக்கு 1,018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 654 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது. அணைக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 12.25 அடியாக உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.90 அடியாக உள்ளது.
    Next Story
    ×