search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் வெட்டி படுகொலை
    X

    மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் வெட்டி படுகொலை

    மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அதியமானபுருசன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 45). இவர் கேரளாவில் லாரி டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு சியாமளா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் மகள் சியாமளாவுக்கும், விஜய் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணம் அடுத்த மாதம் (ஜூன் ) 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. மகள் திருமணத்திற்காக கேரளாவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேட்டு ஊருக்கு வந்திருந்தார். அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சேட்டு வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் முகமுடி அணிந்த 6 பேர் கும்பல் வந்தனர்.

    வீட்டுக்கு வெளியில் நின்று அவர்கள் சேட்டுவின் பெயரை கூறி அழைத்தனர். இதனால் வீட்டுக்குள் இருந்த சேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சேட்டுவை சரமாரியாக வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத சேட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டார்.

    அவரது சத்தத்தை கேட்டு மனைவி சித்ரா வெளியே ஓடி வந்தார். முகமூடி கும்பல் கணவரை சரமாரியாக வெட்டியதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர், முகமூடி கும்பலை தடுக்க சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் சித்ராவையும் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து கும்பல் சேட்டுவை தொடர்ந்து வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார். சேட்டு இறந்ததை உறுதி செய்த முகமூடி கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் விரைந்து வந்து சேட்டு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சித்ரா மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    லாரி டிரைவர் சேட்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது மகளின் திருமணத்தையொட்டி ஏதேனும் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாரி டிரைவர் முகமூடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    Next Story
    ×