search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்காதது ஏன்? பிரேமலதா கேள்வி
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்காதது ஏன்? பிரேமலதா கேள்வி

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்று தே.மு.தி.க. மகளிரணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரேமலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘வரலாற்றில் மட்டுமே படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. இது தமிழக மக்களுக்கு ஒரு அவமான சின்னம் தமிழ்நாட்டின் கருப்பு நாள் மே.22.

    ஒரு மானை சுட்டால் கூட தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் மனிதர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்? தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. முடக்க வேண்டியது இணைய தளங்களை அல்ல. ஆட்சியை தான்.

    தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தால் எந்த மாற்றமும் வராது. மாற்ற வேண்டியது இந்த அரசை தான். 100 நாள் அறவழியில் மக்கள் போராடினார்கள். பேரணிக்கு ஏன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது திட்டமிட்ட படுகொலை. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால் 50 ஆயிரம் மக்கள் கூடும் பேரணியில் பாதுகாப்பு பணிக்கு ஏன் அதிக அளவில் போலீசார் போடவில்லை.

    உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் என வழங்குகிறது. ஒரு உயிரின் மதிப்பு ரூ.10 லட்சம் தானா? இந்த அரசு எதை செய்தாலும் காசு கொடுத்து வாயை அடைக்கலாம் என கருதுகிறது.

    மக்களுக்கு பாதுகாப்பு தராமல் ஸ்டெர்லைட் ஆலைக்கும் அதன் முதலாளிக்கும் அரசு பாதுகாப்பு அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒரு நாளைக்கு 4 முறைபேட்டி அளிக்கின்றனர். தூத்துக்குடி மக்களை நேரடியாக சந்திக்கவில்லை.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏன் மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. படுகொலைக்கு பின்னால் பணம் விளையாடி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×