search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு
    X

    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு

    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிபுலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973-ம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவர்களும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று பல்வேறு ஊர்களில் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் ஆதிநெடுஞ்செழியன், நாகராஜன், ரசல், ராஜ்குமார், ராமநாதன், வீரப்பத்திரன், வடிவேல், சுந்தரேசன், ராமசந்திரன், கணேசன், ராமலிங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

    கொல்கத்தா, சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேதாரண்யம் பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கத்தரிப்புலம் கிராமத்தில் பிறந்து இப்பள்ளியில் படித்த தமிழரசன் கொல்கத்தாவில் அரசு பணியில் உள்ளார். அவர் வாட்ஸ்-அப்பில் இந்த சந்திப்பு விழா அழைப்பை பார்த்து கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கு உள்ள தனது குடும்பத்தாரையும் அழைத்து கொண்டு வந்து விழாவில் கலந்து கொண்டார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சாம்பசிவம், சிவகடாட்சம், தருமையன், இளவழகன், சாமியப்பன், ஜெகநாதன், சரவணன், வீரமணி, ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கூறும்போது, 45 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்தவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் ஆசிரியர்களை சந்தித்து ஆசி வாங்கியதை பெருமையாக நினைக்கிறோம். நாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்தவும், இப்பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஜ.ஏ.எஸ் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×