search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதீஷ்குமார்
    X
    சதீஷ்குமார்

    வாலாஜாபாத் அருகே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை

    வாலாஜாபாத் அருகே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத், சின்னக்கடை, மகிமைதாஸ் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து கொண்டு, காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு டிரைவராகவும் இருந்துவந்தார். இவர் கடந்த ஆண்டு குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரியா (28) என்பவரை திருமணம் செய்தார். கடந்த வாரம் பிரியாவுக்கு வளைகாப்பு நடந்தது.

    இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், மாமியார் சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது காரில் வாலாஜாபாத்தை அடுத்த நத்தப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வள்ளுவப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு தனது காரை நிறுத்திவிட்டு காஞ்சீபுரம் நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தது போலீஸ்காரர் சதீஷ்குமார் என்பதை உறுதிபடுத்தினர். விபத்து குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மனைவியுடன் சதீஷ்குமார் இருக்கும் புகைப்படத்துடன் பர்ஸ் ஒன்றும், அவரது செல்போனும் இருந்தது.

    மேலும் கடிதம் ஒன்று இருந்ததாகவும் அந்த கடிதத்தில், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் எந்த தகராறும் இல்லை. மனைவியின் குடும்பத்தினர் தகராறு செய்ததால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று எழுதியிருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×