search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிப்பட்டி அருகே மண் சரிந்து 3 பேர் பலி -  கல்குவாரி உரிமம் ரத்து
    X

    வாடிப்பட்டி அருகே மண் சரிந்து 3 பேர் பலி - கல்குவாரி உரிமம் ரத்து

    வாடிப்பட்டி அருகே மண் சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கல்குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டியில் கல்குவாரி உள்ளது. அவனியாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் நடத்தி வந்த இந்த குவாரியில் ஏராளமானோர் பணியாற்றி வந்தனர்.

    தொழிலாளர் தினமான நேற்று, குலசேகரன்கோட்டை பரமசிவம் (45), பூச்சம்பட்டி நாகராஜ் (54), கிருஷ்ணன் (45) ஆகியோர் பணியில் இருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் பலியானார்கள்.

    மேலும் சீனிவாசன் (48) உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் விரைந்து சென்று கல்குவாரியை ஆய்வு செய்தனர்.

    அந்த பகுதி மக்கள் குவாரியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று விதிமுறைகளை மீறி செயல்பட்ட குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் கண்காணிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார்.

    அமைச்சர் பரிந்துரையை ஏற்று பூச்சம்பட்டி குவாரிக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை கலெக்டர் வீரராகவராவ் ரத்து செய்தார்.

    தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் பலியான 3 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். வாடிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தனர்.
    Next Story
    ×