என் மலர்
செய்திகள்

காவிரி விவகாரத்தில் மோடியின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி
தருமபுரி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பயணம் வேதராண்யத்தில் தொடங்கி வேலூரில் இன்று இரவு முடிவடைகிறது. பின்னர் அவர்கள் அங்கு நடைபெறும் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக அவர்கள் இன்று தருமபுரிக்கு வந்தனர். தருமபுரியில் உள்ள 4 ரோடு அண்ணாசிலை அருகே வந்தபோது அவர்களை ஆதராவளர்கள் வரவேற்றனர்.
அப்போது பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு 6 வார கால அவகாசம் கொடுத்தும் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. மோடி அரசு துரோகம் இழைத்துவிட்டது.
மேலும் கோர்ட்டு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை காலஅவகாசம் கொடுத்தும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மீண்டும் 2 வாரம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளனர்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சீரழிக்கக்கூடிய மோசமான நடவடிக்கையில் மோடி களம் இறங்கி இருக்கிறார்.
உடனே காவரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழக அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும்.
மோடியின் முகத்திரையை கிழித்தெறிய பட வேண்டும். நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நேரடியாக போர்களத்தில் இறங்கி காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தலை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கின்ற வரையில் எந்தவொரு பணிகளையும் தமிழக அரசு ஈடுபடக்கூடாது.
எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. தமிழக அரசியல் கட்சிகளை திசைதிருப்பக்கூடாது. போராட்ட களத்தை வலிமைப்படுத்தி மோடிக்கு எதிராக களம் இறங்க வேண்டும். காவிரி உரிமையை மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #cauveryissue