என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 59). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி பரிமளாதேவி.
இவர்கள் 2 பேரும் நேற்று இரவு வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூங்கினர். இன்று காலை பரிமளாதேவி எழுந்து மாடியில் இருந்து கீழ் பகுதிக்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பரிமளாதேவி அதிர்ச்சி அடைந்தார்.
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த பரிமளா தேவி வீட்டின் அறைகளை பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.
அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் பணத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை பெயர்த்தெடுத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






