search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? - குழப்பத்தில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? - குழப்பத்தில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சினையில் தமிழக தலைவர்களிடத்தில் ஒற்றுமை குறைந்து ஒவ்வொருவரும் ஒரு கண்ணோட்டத்தில் பேசி வருவதால் உச்சக்கட்ட தவிப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சினையில் தமிழக தலைவர்களிடத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரு கண்ணோட்டத்தில் பேசி வருவதால் காலதாமதம் தான் ஆகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்ற உச்சக்கட்ட தவிப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

    ‘‘உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’’ என்பது பழமொழி.

    இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் வறட்சியில் காய்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை இல்லாததால் விவசாயம் பொய்த்து போனது. காவிரியில் கிடைக்கும் நீரை விவசாயம் செய்து வந்தனர். இந்த தண்ணீரும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை செல்லாததால் விவசாயிகள் பலர் சம்பா பயிரை நடவு செய்யாமலேயே விட்டு விட்டனர்.



    மேலும் காவிரியில் தண்ணீர் முழுமையாக திறந்து விடப்படாததால் நெற்கதிர்கள் அரும்பு விடும் நிலையில் வாட தொடங்கியது. இதனால் விவசாயிகள் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நெற்கதிர்களை காப்பாற்றினர்.

    கர்நாடகாவில் தண்ணீர் தந்தால் மட்டுமே வாடிய பயிர்களை காப்பாற்றமுடியும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு, 2016-2017க்கான பயிர் காப்பீட்டு தொகை, விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய்கள் என விவசாயிகள் அடுக்கடுக்காக பிரச்சினைகள் சந்தித்து வருகிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் இனி விவசாயமே வேண்டாம் என நினைக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.

    இது ஒருபுறம் இருக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு படி மார்ச் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் எதிர்பார்த்து வருகின்றனர்.

    2007-ல் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு ஒதுக்கிய 192 டி.எம்.சி தண்ணீர் 177.25 டி.எம்.சி தண்ணீராக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இருப்பினும் தமிழக விவசாயிகள் இந்த தண்ணீராவது தொடர்ந்து திறந்து விட வேண்டும் என்று ஏங்கி வருகின்றனர். இருந்தாலும் இந்த பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து அழுத்தம் கொடுக்கவே தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தது. ஆனால் அதற்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

    தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் கர்நாடகா தேர்தல் முடிவதற்குள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்று கூறி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் வரும் 30-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். இதேபோல் பா.ஜனதா தலைவர் தமிழிசையும் காவிரி மேலாண்மை வாரியமோ, மேற்பார்வை வாரியமோ முக்கியம் இல்லை. காவிரியில் தண்ணீர் மட்டுமே தேவை என்று கூறியுள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சினையில் தமிழக தலைவர்களிடத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரு கண்ணோட்டத்தில் பேசி வருவதால் காலதாமதம் தான் ஆகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்ற உச்சக்கட்ட தவிப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டு கொடுத்த 6 வார கால அவகாசத்தை தமிழக அரசு வீணடித்து விட்டதாக விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் எம்.பி.க்களால் எந்த பலனும் இல்லை. மத்திய அரசு மீது கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழக எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே டெல்லியில் டெல்டா விவசாயிகளும் கடந்த 26-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது கர்நாடக மாநில தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

    கர்நாடக மாநிலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையை வைத்து பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் தங்களது வாக்கு வங்கியை கணக்கிட்டு வருவதாக டெல்டா விவசாயிகள் குமுறி வருகிறார்கள்.

    எனவே தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×