என் மலர்
செய்திகள்

நாகை அருகே மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல்: 3 பேர் பலி
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த அருள்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சக்தி(வயது 19).
சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி சரக்கு ஆட்டோவில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு நாகை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.
நாகூரை அடுத்த தெத்தி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது எதிரே சென்ற மோட்டார் சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து தாறுமாறாக ஓடிய சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த ஹரிஹரன்(22) மற்றும் அவருடன் உறவினர் தர்மாவளவன் (18) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவர் சக்தி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவர் சக்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தியும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






