என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரில் பெண்கள் நாற்று நடும் போராட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வண்ணான்குடிகாடு கிராமம் உள்ளது. இங்குள்ள புதிய காலனிபகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வண்ணான்குடிகாடு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள வீடுகள் முன்பும், குடியிருப்பு பகுதிகள் முன்பும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைகண்டித்து இன்று அந்த பகுதிமக்கள் வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, வீடுகள் முன்பு தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனக்கூறினர்.






