என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகத்சிங்குக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் திருப்பூர் குமரன்: அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்
    X

    பகத்சிங்குக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் திருப்பூர் குமரன்: அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்

    பகத்சிங்குக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கொடி காத்த திருப்பூர் குமரன் என்றும் அவர் தியாகத்தை போற்றுவோம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம் சூட்டினார்.
    சென்னிமலை:

    சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 114-வது பிறந்த நாள்விழா திருப்பூர் குமரன் பிறந்த ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தமிழக அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மேலும் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மறறும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்து சமயத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்த அவரது வீட்டில் குமரன் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சென்னிமலையில் உள்ள திருப்பூர் குமரனின் புதுப்பிக்கப்பட்ட சிலைக்கும் அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.

    பிறகு குமரப்பா செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குமரனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். அங்கு குமரனின் வாரிசு தாரர்களை பொன்னாடை அணிவித்து அமைச்சர்கள் கவுரவித்தனர்.

    மேலும் விழாவில் 99 பயனானிகளுக்கு ரூ.28¼ லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, “மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க குமரன் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளது. அனைவரும் வியக்கத்தக்க வகையில் குமரன் வாழ்ந்து சுதந்திரத்துக்காக உயிர் நீத்துள்ளார். குமரனின் தியாகத்தை போற்றிவணங்க வேண்டும்“ என்று கூறினார்.

    அமைச்சர் கருப்பணன் பேசும்போது, “நாம் ஒவ்வொருவரும் தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வாழவேண்டும. அம்மா வழியில் அனைத்து அரசு திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

    செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறும்போது, “மறைந்த அம்மா அவர்கள் தியாகிகளை போற்றி புகழ்வதில் சிறந்து விளங்கினார். தமிழ்நாட்டை கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

    சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டி வேண்டி சிறப்பு சேர்த்தவர் ஜெயலலிதா ஆவார். இப்போது திருப்பூர் குமரனின் பிறந்தநாள் விழாவை அவரது உத்தரவின்பேரில் கொண்டாடி மகிழ்கிறோம். பகத்சிங்குக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கொடி காத்த குமரன் ஆவார். அவர் தியாகத்தை போற்றுவோம்.” என்று கூறினார்.

    மேலும் விழாவில் மாவட்ட கலெக்டர் பிரபாகர், எம்.பி.க்கள், செல்வகுமார சின்னையன், சத்யபாமா, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, அந்தியூர் ராஜா கிருஷ்ணன், காங்கயம் தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் கோபால கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தெய்வநாயகம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், கலை மாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×