என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணியில் நாளை புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக கொடி ஊர்வலம் நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8-ந் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழா வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.






