search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏலகிரி மலையில் தேக்கு மரங்கள் வெட்டி போலீஸ் வேனில் கடத்தல்: 2 போலீஸ்காரர்கள் கைது
    X

    ஏலகிரி மலையில் தேக்கு மரங்கள் வெட்டி போலீஸ் வேனில் கடத்தல்: 2 போலீஸ்காரர்கள் கைது

    ஏலகிரி மலையில் தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் கடத்தியது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் கோட்டூர் என்ற பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நச்சுத் காப்புக் காடு உள்ளது. இதில் சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் உள்பட பல்வேறு வகை மரங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்துள்ளன.

    நச்சுத் காப்புக்காட்டில் நள்ளிரவு 1 மணியளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் ஏலகிரி மலைக்கு விரைந்து சென்றனர்.

    காப்புக் காட்டிற்குள் வனத்துறையினர் நுழைந்த போது, ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேன் நின்றிருந்தது. 10-க்கும் மேற்பட்ட கும்பல், தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

    வனத்துறையினர் 2 பேரை பிடித்தனர். 8-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில், ஏலகிரி மலை நிலாவூரை சேர்ந்த வேல்முருகன் (வயது 28), பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளபட்டியை சேர்ந்த தம்பிதுரை (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பிடிபட்ட 2 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை பிரிவு 7-வது பட்டாலியனில் போலீஸ்காரர்களாக பணி புரிவது தெரியவந்தது. போலீஸ் வேனில் தேக்கு மரங்களை கடத்தினால், யாருக்கும் சந்தேகம் வராது என்று திட்டமிட்டுள்ளனர்.

    போலீஸ்காரர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், 2 டன் தேக்கு மரக்கட்டைகளை போலீஸ் வேனுடன் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×