search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டத்துக்கு குரல் கொடுப்போம்: ஜெ.தீபா அறிக்கை
    X

    ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டத்துக்கு குரல் கொடுப்போம்: ஜெ.தீபா அறிக்கை

    ஜி.எஸ்.டி.க்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்துக்கு குரல் கொடுப்போம் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா அறிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. தீபா அணியின் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 80சதவீத பொருள்களின் விலை உயர்ந்து உள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் உலக சந்தை பொருளாதாரம் பற்றி அறியாமல் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தி உள்ளது வியப்பளிக்கிறது ஊருகாய், பிஸ்கெட், கடலைமிட்டாய், நாப்கின் பிரெய்லி புத்தகங்கள் போன்றவற்றிக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இப்பொருள்களின் விலை உயர்வதுடன் தொழில்கள் நசியும் நிலை உருவாகி உள்ளது. ஜிஎஸ்டியால் கார்களின் விலைகள் குறைந்து உள்ளன. மாருதி கார் நிறுவனம் தனது கார்களின் விலையை 3சதவீதம் குறைத்து உள்ளது இதனால் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் பயன் இல்லை.

    தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் அன்றாடம் உணவு விடுதியில் சாப்பிடுகிறார்கள் புதிய சட்ட அமலாக்கத்தால் ஹோட்டல்களில் சாப்பாடு விலை 18 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது பன்னீர், சோப்பு, மசாலா தூள்கள், நெய், ஆடைகளின் விலையும், வங்கி சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன இதுவரையில் வரிவிலக்கு பெற்று வந்த 500-க்கு மேற்பட்ட பொருள்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது.

    சில பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது, வரி குறைப்பால் விலையில் ஏற்படும் மாற்றத்தை தங்களது லாபமாக மாற்றிக் கொள்ளும் கார்ப்பரேட்களை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இச்சட்டத்தில் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அதனால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் பலன் மக்களுக்கு செல்லாமல் கார்ப்பரேட்களின் கைகளுக்கு செல்கிறது இதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

    பொது சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு ஜிஎஸ்டி மூலம் உலகிலேயே அதிக வரிவிதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது வளர்ச்சி அடைந்த நாடுகள் என்று சொல்லப்படும் உலக நாடுகளில் அதிகபட்சமாக 18சதவீத அளவிற்கே சரக்கு சேவை வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அது 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், கோவில்பட்டி போன்ற இடங்களில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் 100 கோடி மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்து உள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

    பட்டாசு மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவிதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க சிவகாசியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    எனவே மத்திய அரசு தொழிலாளர், விவசாய ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு போராடி வரும் அனைத்து தரப்பினருக்கும் அ.தி.மு.க. ஜெ.தீபா அணி என்றும் உறுதுணையாக துணை நிற்போம் தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம், ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×