search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எகிறிய பிரியாணி விலை: ஒரு குடும்பத்தினருக்கு ரூ. 567 வரி - ஓட்டலில் கொந்தளித்த வாடிக்கையாளர்கள்
    X

    எகிறிய பிரியாணி விலை: ஒரு குடும்பத்தினருக்கு ரூ. 567 வரி - ஓட்டலில் கொந்தளித்த வாடிக்கையாளர்கள்

    ஜி.எஸ்.டி வரியால் ஓட்டல்களில் பிரியாணி விலை எகிறி உள்ளதால் ஒரு குடும்பத்தினருக்கு ரூ. 567 வரி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி வரி வந்தாலும் வந்தது இதனால் உற்பத்தியாளருக்கோ,வியாபாரிக்கோ எந்த நஷ்டமும் இல்லை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரியை வாடிக்கையாளர்களிடம் வாங்கி அரசாங்கத்துக்கு கொடுக்கிறார்கள்.

    சுருக்கமாக சொன்னால் வரி வசூலிப்பாளர்களாக செயல்படுகிறார்கள்.

    ஜி.எஸ்.டி வரியின் தாக்கம் ஓட்டல்களில் தான் உடனடியாக தெரிந்தது. உணவு பண்டங்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டனர்.

    அசைவ ஓட்டல்கள் வாடிக்கையாளர்களின் கொந்தளிப்பால் அதிர்ந்தது. ஓட்டலில் 200 ரூபாய்க்கு சாப்பிட்ட பிரியாணி நேற்று ரூ. 238 க்கு விற்க்கப்பட்டது. ஒரு குடும்பத்தினர் நேற்று விடுமுறை நாள் என்பதால் சாப்பிட வந்திருந்தனர். அவர்கள் சாப்பிட்டதற்கு வரி மட்டும் ரூ 567 வசூலித்தனர்.

    ஆவேசம், ஆத்திரம், குமுறல் எல்லாம் இருந்தாலும் என்ன செய்ய முடியும்? பில்லை செலுத்தி விட்டு சென்றார்கள்.

    அவர்கள் கேட்டது. ‘உணவு வகைகளுக்கு எத்தனை சதவீதம் லாபம் வைத்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியை நம்மிடம் வசூலிக்கிறார்கள். நமக்கு தண்டமா? என்பது தான்.

    அந்த குடும்ப பெண்களின் கணக்கு வேறு விதமாக இருந்தது. ஒரு கிலோ அரிசி ரூ. 50 தான். அதில் 20 தோசைக்கு மேல் தயார் பண்ணமுடியும். ஒரு தோசை ரூ 75 என்றால் குறைந்த பட்சம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்று விடுகிறார்கள். எண்ணெய், நெய், கியாஸ் உள்பட இதர செலவுகள் ரூ. 500 என்று வைத்து கொண்டாலும் ஒரு கிலோ அரிசியில் ரூ. 1000 லாபம் பார்க்கிறார்கள். அதில் தானே 18 சதவீத வரியை கட்ட வேண்டும். ஆனால் எங்கள் மீது திணிப்பது என்ன நியாயம்? இதையெல்லாம் தடுப்பது, கண்காணிப்பது யார்? என்று ஆவேசப்பட்டனர்.

    ஆனால் எல்லா பொருட்களிலும் இதே நிலைதான் என்பது தான் உண்மை. இதைதான் ‘சிஸ்டமே’ சரியில்லை என்றார்களோ?

    Next Story
    ×