என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் சூப்பர் லீக்: பாகிஸ்தான் வேண்டுகோளை நிராகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு?
- இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
- எஞ்சிய பிஎஸ்எல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்தது. அதேபோல் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேவேளையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. போட்டியை நடத்த அனுமதி கேட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வேண்டுகோளை யுஏஇ நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் போர்டுக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு எப்போதுமே ஆதரவாக இருந்து வருகிறது. அதேவேளையில் இந்தியாவில் நடைபெறக் கூடிய போட்டிகளுக்கு எதாவது சிக்கல் ஏற்பட்டால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் அங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் எமிட்ரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் நல்ல பிணைப்பு இருந்து வருகிறது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை முன்னிட்டு பாதுகாப்பு கவலையை கருத்தில் கொண்டு நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






