என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஞ்சி டிராபி: பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம்- தமிழ்நாடு 512 ரன்கள் குவித்து டிக்ளேர்
    X

    ரஞ்சி டிராபி: பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம்- தமிழ்நாடு 512 ரன்கள் குவித்து டிக்ளேர்

    • பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • விமல் குமார் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டியில் தமிழ்நாடு, நாகாலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணியின் ஆதிஷ், விமல் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆதிஷ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் களம் இறங்கினார்.

    விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 150 ரன்களை கடந்து சென்றனர். இதனால் இரட்டை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. விமல் குமார் 224 பந்தில் 18 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. அடுத்து அந்த்ரே சித்தார்த் களம் இறங்கினார். தமிழ்நாடு அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்திருந்தபோது நேற்றைய முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், அந்த்ரே சித்தார்த் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2ஆவது நாள் தொடங்கியது. சித்தார்த் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 512 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபா இந்திரஜித் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    Next Story
    ×