என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த அனுமதி?
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- இதனால் பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேசினர். அதன்பிறகு டி.கே.சிவகுமார் கூறும்போது, , சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை கர்நாடக கிரிக்கெட் சங்கம் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பெரும் கூட்டங்களுக்கு பொருத்தமற்றது, பாதுகாப்பற்றது என்று ஆணையம் தெரிவித்தது. இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






