என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக இந்தியா திகழ்கிறது- பாண்டிங்
- இந்த தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
- இந்த வெற்றிக்கு பும்ரா, முகமது சிராஜ், ஹர்சித் ரானா, நிதிஷ்குமார் ஆகியோரை பாராட்ட வேண்டும்.
புதுடெல்லி:
பெர்த்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், 'ஆஸ்திரேலிய அணி 295 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை. இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கும். 'டாஸ்' ஜெயித்து இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவா? என்று பலரும் என்னிடம் கேட்டனர்.
இதற்கு முன்பு பெர்த்தில் நடந்த 4 டெஸ்டுகளிலும் முதலில்பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் முதலில் தான் பேட்டிங் செய்தாக வேண்டும். மேலும் மைதானத்தின் புள்ளி விவரங்களுக்கு எதிராக இந்திய அணி செல்ல விரும்பவில்லை.
முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னில் சுருண்டாலும், அவர்களுக்கு பவுலிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கு அவர்களை பாராட்ட வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
தற்போது இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது. உள்ளூர் சூழலைவிட வெளிநாட்டு சீதோஷ்ண நிலை மற்றும் இங்குள்ள ஆடுகளத்துக்கு ஏற்ப நன்றாக விளையாடுகிறார்கள். அதை கடந்த வாரம் பெர்த் டெஸ்டில் நிரூபித்துள்ளனர்' என்றார்.






