என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முக்கிய நிபந்தனைகளை நிராகரித்த ஐசிசி: முழு விவரம்
- பாகிஸ்தான் இந்தியாவுடன் உலகக் கோப்பையில் விளையாட பேச்சுவார்த்தை.
- பாகிஸ்தான் சில நிபந்தனைகள் ஐசிசி முன் வைத்தது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில நிபந்தனையை விதித்தது, தற்போது பாகிஸ்தான் நிபந்தனைகளில் முக்கியமானதை ஐசிசி நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் முன்வைத்த நிபந்தனையும், அதற்கு ஐசிசி அளித்த விளக்கமும் பின்வருமாறு:-
பாகிஸ்தானின் நிபந்தனை 1: வங்கதேசத்திற்கு நிதி தொடர்பாக அபராதம் விதிக்கக் கூடாது. உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், ஐசிசி-யின் முழு வருவாய் பகிர்வு கிடைக்க வேண்டும்.
ஐசிசி பதில்: இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. வங்கதேச கிரிக்கெட் போர்டு தண்டிக்கப்படாது.
பாகிஸ்தானின் நிபந்தனை 2: வங்கதேசத்திற்கு அடுத்த சுற்று உலகக் கோப்பை அறிவிப்பில் கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஐசிசி பதில்: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து பரிசீலனை செய்யப்படும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 3: இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள்.
ஐசிசி பதில்: இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இருதரப்பு தொடர் என்பது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விவகாரம். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடங்கும்.
பாகிஸ்தானின் நிபந்தனை 4- இந்தியா- பாகிஸ்தான்- வங்கதேசம் இடையில் முத்தரப்பு தொடர் வேண்டும்.
ஐசிசி பதில்: அதிகார வரம்பு இல்லாததை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் நிபந்தனை 5: இந்த வருடம் இந்தியா வங்கதேசம் சென்று விளையாட இருந்தது. இந்த தொடரை உறுதிப்படுத்தும் வகையில் ஐசிசி ஈடுபட வேண்டும்.
ஐசிசி பதில்: சுற்றுப் பயணங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அது தலையிட மறுக்கிறோம்.
இவ்வாறு பதில் அளித்த ஐசிசி, இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசி முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது.






