என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 6 மாதம் ஓய்வு கொடுத்த ஷ்ரேயாஸ் அய்யர்
- முதுகு வலிக்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அசௌகரியமாக உணர்ந்துள்ளதாக தகவல்.
- 6 மாதம் ரெட்-பால் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், பிசிசிஐ-யிடம் ரெட்-பால் (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் காலம் விலகி இருக்க அனுமதி கேட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் வேண்டுகோளை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. அதேபோல் ரஞ்சி கோப்பை சாம்பியனுக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா விளையாடும் இரானி கோப்பைக்கும் அவருமைய பெயர் பரிசீலனை செய்யப்படமாட்டாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய அவர், 2ஆவது டெஸ்டில் இருந்து விலகினார்.
முதுகு வலி காரணமாக லண்டனில் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து மீண்டும் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடும் போது, அசௌகரியமாக உணர்ந்துள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தார். தனக்கு 6 மாதம் ஓய்வு தேவை என பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்குப்ப பிறகு துலீப் டிராபி அரையிறுதியில் விளையாடினார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் விளையாடினார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதன்பின் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். 2023 ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.






