என் மலர்
விளையாட்டு

2-வது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
- உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது.
- சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் ரத்தானது. சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது.
உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (20 ஓவர்) தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.
இந்திய அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி நல்ல நிலையில் உள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ் முதலாவது ஆட்டத்தில் ஹேசில்வுட், எலிஸ் பந்து வீச்சில் இமாலய சிக்சர் விரட்டி அசத்தினார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை கட்டமைக்க முடிவு செய்துள்ள இந்தியா அதிரடி அணுகுமுறையை கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகமாக மட்டையை சுழற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் களம் காணும் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூர் சூழல் சாதகமான அம்சமாகும். அத்துடன் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆட இருப்பது நிச்சயம் பரவசமூட்டும்.
அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ் என அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சேவியர் பார்லெட் கைகொடுக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டியில் ஆடி இருக்கும் இந்திய அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
கடந்த ஆட்டத்தை போல் மெல்போர்னிலும் மழை புகுந்து விளையாட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேத்யூ குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






