search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜடேஜா - விராட் கோலி
    X
    ஜடேஜா - விராட் கோலி

    ஒருசில மோசமான ஆட்டங்களை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் - ரவீந்திர ஜடேஜா

    கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீரர் ஜார்ஜ்மன்சே அதிகபட்சமாக 24 ரன்னும், மைக்கேல் லெஸ்க் 21 ரன்னும் எடுத்தனர். முகமது ‌ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி 15 ரன் கொடுத்து தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். பும்ராவுக்கு 2 விக்கெட்டும், அஸ்வினுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 81 பந்துகள் எஞ்சிய நிலையில் 86 ரன் இலக்கை எடுத்தது. இந்தியா 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லோகேஷ் ராகுல் 19 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 16 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

    இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை 66 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. இந்திய அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. முதல் 2 ஆட்டத்தில் பாகிஸ்தான் (10 விக்கெட்), நியூசிலாந்து (8 விக்கெட்) தோற்று இருந்தது.

    இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை வருகிற 8-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், இந்திய அணி அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பு குறைவே.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. 2-வது நாடாக நியூசிலாந்து தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் ஒரு சில ஆட்டங்களின் மோசமான நிலையை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த அணிதான் தற்போது ஒன்று அல்லது 2 ஆட்டங்களில் மோசமான நிலையை வெளிப்படுத்தி உள்ளது.

    இதை வைத்துக்கொண்டு இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம். அதில் எந்தவித நியாயமும் இல்லை.

    20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் ஒருசில ஆட்டங்கள் மோசமாக அமையலாம். ஆனால் அந்த தோல்விகளை பற்றி அதிகம் சிந்திக்க முடியாது. அடுத்த ஆட்டத்திற்கான வாய்ப்புகள் குறித்து யோசித்து முன்னேறி செல்ல வேண்டும்.

    நான் வழக்கமாக எப்படி பந்து வீசுகிறேனோ அதுபோல்தான் ஸ்காட்லாந்துக்கு எதிராகவும் பந்து வீசினேன். எனது திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது பங்களிப்பாகும்.

    இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்வதற்கும், 2-வது பேட்டிங் செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. பனித்துளியால் பந்துவீச்சு தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் டாஸ் வெல்வது முக்கியமானதாகும்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழத்தினால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் ஒரு நிருபர் கேட்டார். அப்படி நிகழ்ந்தால் நாங்கள் பேக்கை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு போவோம். அப்புறம் என்ன மிச்சம் என்று சிரித்தபடி ஜடேஜா பதில் அளித்தார். 

    Next Story
    ×