search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை வான்கடே மைதானம்
    X
    மும்பை வான்கடே மைதானம்

    கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த அனுமதி - மராட்டிய அரசு உத்தரவு

    மும்பை வான்கடே மைதானத்தின் ஊழியர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி நடைபெறும் இடங்களில் ஒன்று மும்பை. அங்குள்ள வான்கடே மைதானத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 10 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 10-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனாவின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. மும்பையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மும்பை மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு நடைபெற உள்ள போட்டியை ஐதராபாத் அல்லது இந்தூரில் நடத்தலாமா என்று கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தியது.

    இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிப்பால் மராட்டிய மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று கருதப்பட்டது.

    இந்தநிலையில் கட்டுப்பாடுகளுடன் மும்பையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மராட்டிய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக மராட்டிய மந்திரி நவாப் மாலிக் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல். போட்டிக்காக 4 அணி வீரர்கள் மும்பையில் உள்ள மைதானங்களில் பயிற்சி பெறுகிறார்கள். கட்டுப்பாடுகளுடன் பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மும்பை வான்கடே மைதானத்தின் ஊழியர்களில் மேலும் 2பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டி நடத்துவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியமும், மும்பை கிரிக்கெட் சங்கமும் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×