search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தினர்- ரோகித் சர்மா பாராட்டு

    அபிதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்தியது. பந்து வீச்சாளர்கள், திட்டத்தை சரியாக செயல்படுத்தினர் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. அபிதாபியில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 70 ரன்னும், போல்லார்ட் 47 ரன்னும், ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் எடுத்தனர்.

     


    பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 143 ரன்னே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிக்கல்ஸ் பூரன் 44 ரன் எடுத்தார்.

     

    மும்பை தரப்பில் பும்ரா, பேட்டிசன், ராகுல் சாகல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 4-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

    பஞ்சாப் அணி 3-வது தோல்வியை (4 ஆட்டம்) சந்தித்துள்ளது.

    வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த வெற்றி. எங்கள் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் தாக்குதல் தொடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை எதிர்க்கொண்டு இறுதி வரை முன்னேற விரும்பினோம்.

    ஹர்திக் பாண்டியா மற்றும் போல்லார்ட் இறுதி கட்டத்தில் ரன்களை பெற்று கொடுத்தனர். இது போன்று நிறைய முறை செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சிறந்த நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டு மொத்தமாக பேட்டிங் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பந்து வீசுவது எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதையும் நாங்கள் அறிந்து இருந்தோம். அதையும் நாங்கள் செய்தோம்.

    பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். நான் 500 ரன்னை கடந்ததை நன்றாக உணர்கிறேன். ஆனால் அதை நான் அதிகமாக பார்க்கவில்லை. போட்டியில் வெல்வதுதான் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    இந்த தோல்வி வெறுப்பு அளிக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. 4 ஆட்டத்தில் 3-ல் நாங்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். இந்த ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டும் வரவேண்டும்.

    மற்றொரு பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது நன்றாக இருக்கும். மேலும் ஒரு ஆல்ரவுண்டர் இருப்பது சிறப்பானதாகவும் இருக்கும். ஆனால் பயிற்சியாளர்கள் பேசி கூடுதல் பந்து வீச்சாளரை சேர்ப்பதா? அல்லது அதே அணியுடன் விளையாடுவதா? என்பதை முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×