search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச்,  இயான் மோர்கன்
    X
    ஆரோன் பிஞ்ச், இயான் மோர்கன்

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது
    சவுதம்டன்:

    கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அத்துடன் அந்த அணி தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டேவிட் மலான், விக்கெட் கீப்பர் ஜோஸ்பட்லர் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். முதலாவது ஆட்டத்தில் 44 ரன்னும், 2-வது ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 77 ரன்களும் குவித்த ஜோஸ்பட்லர் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி வருகிறது. இதனால் அந்த அணி சறுக்கலை சந்தித்துள்ளது. அதில் இருந்து மீண்டு வந்து ஆறுதல் வெற்றியை ருசிக்க ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முழுமுயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×