search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷேவாக்
    X
    ஷேவாக்

    கிரிக்கெட்டில் சூதாட்டத்துக்கு வீரர்கள் இடம் அளிக்கக்கூடாது - ஷேவாக் வேண்டுகோள்

    கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரிய விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் சூதாட்டம், ஊக்க மருந்து போன்ற தவறான பாதையில் பயணிக்கக்கூடாது. அப்படி பயணித்தால் நீங்கள் இந்த விளையாட்டை விரும்பவில்லை என்று தான் அர்த்தம். பணத்துக்காகத் தான் நீங்கள் விளையாடுகிறீர்கள் எனலாம். சூதாட்டம் குறித்து யாராவது அணுகினால் வீரர்கள் அந்த விஷயம் குறித்து உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் புகார் செய்யாமல் தவிர்த்தால் அந்த சூதாட்ட தரகர் மற்றொரு வீரரை தொடர்பு கொள்ள வழிவகுத்தது போலாகி விடும்.

    ஊக்க மருந்து விவகாரத்தில் வீரர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இளம் வீரர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் சூதாட்டம், ஊக்க மருந்து போன்ற பிரச்சினை எழாமல் இருக்க வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆத்மாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கைவைக்கக்கூடாது. புதிய விஷயங்கள் மேற்கொள்ள வேண்டியது தான். அதற்காக டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கக்கூடாது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதன் மூலம் ரசிகர்களை அதிகம் கவர முடியும்.

    142 ஆண்டு கால டெஸ்ட் போட்டி இன்னும் இளமையாக தான் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறிய 533 டெஸ்ட் போட்டிகளில் 83 போட்டிகள் மட்டுமே டிராவில் முடிந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 223 டெஸ்டில் 31 போட்டிகள் மட்டுமே டிரா ஆனது. டிரா சதவீதம் குறைந்து கொண்டு தான் இருக்கிறது. போட்டியின் போது வீரர்கள் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக்கூடாது.

    முன்னாள் கேப்டன் பட்டோடியின் ஆலோசனை நிறைய ரன் குவிக்க எனக்கு உதவிகரமாக இருந்தது. பட்டோடியை நான் மகாபாரத கிருஷ்ணருடன் ஒப்பிடுவேன். கிருஷ்ணரின் ஆலோசனை இல்லாவிட்டால் மகாபாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்று இருக்கமாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாம் எப்படி விளையாட வேண்டும் என்பதை பட்டோடி தான் மாற்றி காட்டினார். வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி தேடிக்கொடுத்த முதல் இந்திய கேப்டன் பட்டோடி தான். அவர் இல்லாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற அதிக காலம் பிடித்து இருக்கும்.

    இவ்வாறு ஷேவாக் கூறினார்.
    Next Story
    ×