search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகானே
    X
    ரகானே

    ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்புவேன் - இந்திய வீரர் ரகானே நம்பிக்கை

    டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் இந்திய வீரர் ரகானே ஒரு நாள் போட்டிக்கும் திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    20 ஓவர் கிரிக்கெட் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்து இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை (காலை 9.30 மணி) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடத்தப்படுவதால் அதை கருத்தில் கொண்டு பயிற்சியின் போது இளஞ்சிவப்பு நிற பந்தும் (பிங்க்) பயன்படுத்தப்பட்டது. மேலும் வலை பயிற்சி பவுலர்களான ராகவேந்திரா, இலங்கையின் நுவான் செனவிரத்னே ஆகியோர் பந்தை வேகமாக எறிய அதை கேப்டன் கோலி உள்ளிட்டோர் எதிர்கொண்டு பயிற்சி எடுத்தனர். மாற்று தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் மீது எகிறி வந்த ஒரு பந்து தாக்கியது. ஆனால் காயம் பயப்படும்படி இல்லை.

    பகல்-இரவு டெஸ்டுக்கு போதிய காலஅவகாசம் இல்லாததால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டின் பேரில் அஜிங்யா ரகானே, மயங்க் அகர்வால், புஜாரா, முகமது ஷமி ஆகிய இந்திய வீரர்கள் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் மின்னொளியில், பிங்க் பந்தில் தீவிர பயிற்சி பெற்றனர்.

    இது குறித்து இந்திய துணை கேப்டன் 31 வயதான அஜிங்யா ரகானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப முடியுமா? என்று கேட்கிறீர்கள். நான் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ரன்கள் குவித்து சிறந்த பங்களிப்பை அளித்தால், அதன் மூலம் ஒரு நாள் போட்டிக்கு (கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார்) திரும்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லாமே தன்னம்பிக்கையில் தான் இருக்கிறது.

    வங்காளதேசம், மிகச்சிறந்த அணி. ஒரு குழுவாக ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள். எதிரணி பற்றி அதிகம் சிந்திப்பதை விட எங்களது பலம் என்னவோ அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது பரவசமூட்டுகிறது. இது புதிய சவாலாகும். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிங்க் பந்தில் பகலிலும், இரவிலும் பயிற்சி பெற்றபோது, பந்து எப்படி ஸ்விங் ஆகிறது, ஆடுகளத்தில் பட்டு எப்படி திரும்புகிறது அதை எப்படி திறம்பட சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்தினோம். சிவப்பு நிற பந்தை விட புதிய பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதை பயிற்சிக்கு பிறகு கண்டுபிடித்தோம். நிச்சயம் இது சிவப்பு நிற பந்து ஆட்டத்தில் இருந்து வேறு பட்டது தான். அதற்கு ஏற்ப எங்களது வீரர்கள் தங்களை சீக்கிரமாகவே மாற்றிக்கொள்வார்கள். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் நாங்கள் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.

    மனநிலையும், தொழில்நுட்பமும் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கும். மனரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டால், பிங்க் பந்தை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது. அது மட்டுமின்றி இத்தகைய சூழலில் பந்தை சற்று தாமதமாக அதாவது உடல் அருகே பந்தை வரவிட்டு ஆடுவதும், பேட்டை உடலோடு நெருக்கமாக கொண்டு வந்து பந்தை அடிப்பதும் முக்கிய அம்சமாக இருக்கும். கொல்கத்தாவில் இரவில் பயிற்சியில் ஈடுபடும் போது, பனிப்பொழிவின் தாக்கத்தில் பந்தின் தன்மை எப்படி மாறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு ரகானே கூறினார்.

    மற்றொரு இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அளித்த பேட்டியில், ‘துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது எனக்கு பிங்க் பந்தில் விளையாடிய அனுபவம் உண்டு. பிங்க் பந்தை பகலில் பார்ப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் சூரியன் மறையும் சமயத்தில் ஒரு முனையில் பந்தை எதிர்கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். இந்த பகுதி தான் முக்கியமானதாக இருக்கும். பெரும்பாலான வீரர்கள், மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பவுலிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்களின் கூக்ளி வகை பந்தை சந்திப்பது சற்று சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளனர்’ என்றார்.

    Next Story
    ×