search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா பிளாஸ்டர்ஸ் கேப்டன் சந்தேஷ் ஜின்கான் - கொல்கத்தா அணியின் கேப்டன் மானுல் லான்ஜரோட்
    X
    கேரளா பிளாஸ்டர்ஸ் கேப்டன் சந்தேஷ் ஜின்கான் - கொல்கத்தா அணியின் கேப்டன் மானுல் லான்ஜரோட்

    ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்

    10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., எப்.சி.கோவா, மும்பை சிட்டி எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் 18 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கவுகாத்தி, டெல்லி, கொச்சி, சென்னை, ஜாம்ஷெட்பூர், புனே, கோவா ஆகிய 10 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. லீக் சுற்றில் மொத்தம் 90 ஆட்டங்கள் இடம்பெறுகிறது. இதுவரை 59 லீக் ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும். மார்ச் மாதத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொடரில் அக்டோபர் 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும், நவம்பர் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், டிசம்பர் 17-ந் தேதி முதலும் இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தயாராவதற்கு வழிவிடும் நோக்கில் இந்த இடைவெளி விடப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் மானுல் லான்ஜரோட் தலைமையிலான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சந்தேஷ் ஜின்கான் தலைமையிலான கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது.

    கொல்கத்தா 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. அந்த 2 முறையும் இறுதிப்போட்டியில் அந்த அணி கேரளாவை வீழ்த்தி தான் பட்டத்தை தனதாக்கியது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா அணி 5 முறையும், கேரளா அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. 4 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. கடந்த சீசனில் மோசமாக விளையாடி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்ட கொல்கத்தா அணி இந்த தடவை பல புதிய வீரர்களுடன் எழுச்சி பெறும் வேட்கையுடன் ஆயத்தமாகியுள்ளது.

    போட்டி குறித்து கொல்கத்தா அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கோப்பெல் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போதுமான அளவில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் தங்களது திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள். எங்கள் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரில் கேரளா-கொல்கத்தா அணிகள் இடையிலான மோதல் பெரியதாகும். இரு அணிகளும் 2 முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன. இரு ஆட்டத்திலும் போட்டி மிகவும் நெருக்கமானதாக இருந்தது. இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தினாலும், இந்த ஆட்டம் ரசிகர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்க்கும் என்று கருதுகிறேன். கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த அணியை வீழ்த்துவது மட்டுமே இந்த சீசனில் முன்னேற போதுமானது கிடையாது’ என்றார்.

    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனக்குரிய பங்குகளை விற்று விட்டதால் இந்த முறை அணியுடன் அவரது பயணம் இருக்காது. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் காணும் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது. மலேசியா மற்றும் கோவாவில் பயிற்சி முடித்து திரும்பி இருக்கும் சென்னை அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

    சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணி ரூ.4 கோடியும், அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகள் தலா ரூ.1½ கோடியும் பரிசாக பெறும்.  #ISL2018 #ATKvKBFC

    Next Story
    ×